Friday, January 2, 2015

வளர்ச்சி

மோதி மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமராகி இன்னும் ஓராண்டு முடியவில்லை. ஆனால் சங்கப் பரிவாரங்களின் அட்டகாசங்கள் வேகமாக பரவி வருகின்றன. வளர்ச்சியை முன்னிறுத்தி மோதி பிரச்சாரம் செய்தாலும் ஆட்சி அதிகாரத்தை பெருவதற்கு அது ஒரு சாக்கு மட்டுமே என்றும் பாஜகவின் முக்கிய நோக்கம் இந்துத்வாதான் என சிலர் இதை எதிர்பார்த்தே இருந்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரத்திலேயே வளர்ச்சியை பின் தள்ளிவிட்டு இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.

 இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லாம் இந்துக்கள் என்றும், தமது உடமைகள் என்றும் RSS தலைவர் சொல்கிறார். சமஸ்கிருதத்தையும், இந்தியையும் உள்ளே திணிக்க எல்லா உத்திகளையும் உள்துறை, மனித வளத்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பிற அமைச்சகங்கள் கையாள்கின்றன. கிறிஸ்தவ சிறுபான்மையினரின் முக்கிய மத விழா நாளை சப்பைக்காரணம் சொல்லி ஆக்கிரமிக்கிறார்கள். மதக்கலவரங்களை தூண்டும்படியாக பல சமூக விரோத செயல் புரிகிறார்கள், பொய் புரட்டுகளை அவிழ்த்து விடுகிறார்கள். பெரும்பான்மை இந்தியர்களுக்கு சூத்திரப்பட்டம் கட்டி வர்ணாசிரம அநீதியை நிலை நாட்டும் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என முக்கிய பொருப்பிலிருக்கும் அமைச்சர் கூறுகிறார். பாஜகவை ஆதரிக்காதவர்கள் எல்லாம் தவறான வழியில் பிறந்தவர்கள் என்கிறார் இன்னொரு அமைச்சர். பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் விமானங்கள், அணுகுண்டு, ப்ளாஸ்டிக் சர்ஜரி போன்றவை இருந்தன என பிரதம மந்திரியே புருடா விடுகிறார்.

தாய் மதத்திற்கு அழைக்கிறோம் எனக்கூறிக்கொண்டு இந்து மத அநீதியில் இருந்து தப்பிய அப்பாவி மக்களை ஏமாற்றி மத அரசியல் செய்கிறார்கள். போலிச்சாமியார்களைப் பற்றி படமெடுத்து வெளியிட்டால் திரையரங்குகளை அடித்து நொறுக்குகிறார்கள்.

என்னப்பா வளர்ச்சி வளர்ச்சி எனக் கூவிக் கூவி மோதியை விற்றீர்களே இதுதானா அந்த வளர்ச்சி?